மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல் – ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

கடந்த 29 ஆம் திகதி அன்று தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மூங்கிலாறு ஆதார வைத்தியசாலைக்கு சென்ற தந்தை ஒருவர் அனுமதிச்சீட்டை வழங்கப்பட்ட பின்னர் வைத்தியர் இரண்டு மணியின் பின்னரே நோயாளியை பார்வையிடுவார் என்று கூறியதற்கு பின்னர் வைத்தியசாலையில் கண்ணாடியை அடித்து உடைத்ததும் அங்கே காவல் கடமையிலிருந்த காவலாளியை தாக்கி உள்ளதுடன் மருத்துவமனையின் பெயர் பலகையையும் சேதப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நேற்றைய தினம் மூங்கிலாறு ஆதார மருத்துவமனை வைத்தியர்கள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றும் மருந்தினை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த மருத்துவமனையின் மருந்தாளர் தேவிபுரம் மருத்துவமனையில் மருந்து வழங்கிவிட்டு சில நேரங்களில் மாலை வேளையிலேயே மருந்து வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்.
இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையினை மருத்துவ அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதற்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மருத்துவமனை அரச சொத்து சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.