கொழும்பு நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடந்த 19ம் தேதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆபத்தான இரசாயனங்கள் உட்பட 1,154 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மீதமுள்ள பணியாளர்களை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டனர்.

தீயை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

தற்போது தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது போன்ற கப்பலில் ஏற்படும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கப்பலின் பகுதி தீயினால் சேதம் அடைந்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு இந்திய கடலோர பாதுகாப்பு படை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தால் நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.