ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிப்பதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க அஞ்சல் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இவ்வாறான நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அஞ்சல் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்

எவ்வாறாயினும், அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது தொழில் பிரச்சினைகளை தீர்க்குமாறு பல தடவைகள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.