வவுனியாவில் இராணுவத்துடன் கைகலப்பு – இருவர் வைத்தியசாலையில்


வவுனியா கனகராயன் குள பகுதியில் உள்ள கரப்புகுத்தி குளத்தில் அத்துமீறி மீன்பிடிக்க முயன்ற இராணுவத்தினருக்கும் பொது அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப்போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். குளத்தினை மீன்பிடிப்பதற்காகக் குத்தகைக்கு எடுத்தவர்களால் “மீன்பிடிக்க வேண்டாம்” என இராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோதும் இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அப்பகுதிக்குச் சென்ற குளத்தினை குத்தகைக்கு எடுத்த பயனாளியும் அவரது நண்பரும் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்தை மறித்த போது இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்த வாள்களால் தாக்கியுள்ளனர்.

இதில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (வயது 29) என்ற இளைஞன் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

இதேவேளை, இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் மாங்குள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் தொடர்பால் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *