தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டம் – நாடு முடங்கும் அபாயம்


அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை வெளியிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

மின்சாரம், பெற்றோலியம், நீர், துறைமுகங்கள் மற்றும் வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன.

18 அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இலங்கை வங்கியின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கறுப்பு பட்டி அணிந்து அல்லது கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளிப்பார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியம், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக ஊழியர்கள் இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்களின் பேச்சாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

தமது தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றியத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *