துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் கடந்த 19 ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி களுவாகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு வயதுக் குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
யக்கலமுல்ல, மகேதர பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ரி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய யக்கலமுல்ல பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.