எரிபொருள் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியை மோதிய டிப்பர் – சாரதி கைது


எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அதிகாரி மீது டிப்பர் வாகனத்தை கொண்டு மோதிய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிசக்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனத்தின் இறுதி இலகத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை செயற்படுத்தப்பட்டிருந்த போது அங்கு எரிபொருள் பெற வந்த டிப்பர் வாகனமொன்றின் இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது என பொலிஸ் அதிகாரி கூறியதை தொடர்ந்து இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

45 வயதுடைய எல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *