கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து போராட்டம்


யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று(வியாழன்) மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறாவிட்டால் கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

கடற்றொழிலாளர்களின் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் எனவும் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், மண்ணெண்ணெய் பல நாட்களாக வடக்கிற்கு வரவில்லை. தென்னிலங்கையில் சகல இடங்களுக்கும் எரிபொருள் போய்க்கொண்டிருக்கின்றது.

வடபகுதிக்கு மாத்திரமே மண்ணெண்ணெயும் எரிபொருளும் தடைபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதனை நாம் பலதடவை சுட்டிக் காட்டியுள்ளோம். இதனால் கடற்றொழிலாளர் சங்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று மண்ணெண்ணெய் வரவில்லை என்றால் நீங்கள் என்னவென்றாலும் செய்யுங்கள் என்று நாங்கள் கூறியுள்ளோம்.

தமிழ் அரசியல்வாதிகளின் அலுவலகத்தையோ மாவட்ட செயலகத்தையோ ஆளுநர் அலுவலகத்தையோ அவர்கள் முற்றுகையிட தயாராகவுள்ளனர்.

நாங்கள் இதனை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. கடற்றொழில் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டு உள்ளது.

தயவு செய்து இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்திலெடுத்து இன்று (வியாழன்) கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும்.

அது வரத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *