யாழில் சுகாதார சீர்கேடு – 03 உணவகங்களுக்கு சீல்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ் மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் தி. கிருபன், பு. ஆறுமுகதாசன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19 ஆம் திகதி உணவு தொழிற்சாலை, உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஓர் உணவு தொழிற்சாலை, மற்றும் மூன்று உணவகங்கள் இனங்காணப்பட்டன.

இதற்கமைய, குறித்த உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (24) வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த வழக்குகளை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் A.A.ஆனந்தராஜா குறித்த உணவு கையாளும் நிலையங்கள் அனைத்தையும், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவு கையாளும் நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.