துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி புத்தர் சிலை வைக்க முயற்சி

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருமார்கள் சிலர் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் , ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது மக்களின் காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலுடன் சென்றிருந்தார்.
இதன்போது புத்தர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களை மெய்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.
மேலும் புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது திருகோண்மலையில் பௌத்த பிக்குவின் அடாதான செயல் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.