புகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சிக்கி மாணவி உயிரிழப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

புகையிரதத்தில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து புகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் மாணவி சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதோடு அவரது உடலில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி சசிகலா (20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார்.புதன்கிழமை விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர் ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது கால் தவறி விழுந்து மாணவியின் இடுப்பு பகுதி புகையிரத்திற்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கி உள்ளது.

இதனை கவனித்த புகையிரத பொலிஸார் மற்றும் சக பயணிகள் புகையிரதத்தை உடனடியாக நிறுத்தி இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் நடைபாதையை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மாணவியின் எதிர்பாராத மரணம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.