அரசியல்வாதிகள் ஊர் பக்கம் வந்தால் அடித்து துரத்துவோம்


எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை என்றும், வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் உயிர்கள் பலியாக இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த மக்கள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *