மேலும் 17 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (21) காலை மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து இரண்டு படகுகளில் மன்னார் அடம்பன் மற்றும் உயிலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன்,பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களும், அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 5 பேர் இன்று (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது டன் மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பால் மாவு மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது குழந்தையை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 18 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 60 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.