வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது.

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 18.03 சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இவ் வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு ஏ.எப்.டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு என்.விஷ்னுகாந்தும் தலைமை தாங்கிய நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 163 ஓட்டங்களை பெற்றது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் ஏ.நிகரிலன் 69 ஓட்டங்களையும் ஏ.கெளசிகன் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் எஸ்.கீர்த்தனன் 08 ஓவர்கள் பந்து வீசி 39 ரன்களை கொடுத்து 04 விக்கெட்டுக்களையும் சமிந்தன் 02 விக்கெட்டுக்களையும் சவுத்தியன் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

164 என்கிற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி 44.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 115 ஓட்டங்களை பெற்றது.

சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் எஸ்.சமிந்தன் 28 ஓட்டங்களையும் ஜே.திவிகரன் 22 ஓட்டங்களையும் பெற்றதுடன் பந்துவீச்சில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் பி.பிருந்தன் 32 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் மதுசன் 32 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 48 ஓட்டங்களினால் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை வீழ்த்தி 29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இதுவரை நடந்த ஒரு நாள் போட்டியில் 21 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.